Total Pageviews

Friday 1 April 2022

திருமங்கை மன்னனும் வேடுபறியும்

      


 ஸ்ரீரங்கம் 

 திருமங்கை மன்னனும் வேடுபறியும் 


                                      நடித்து காட்டப்படும் வேடுபறி 

         ஸ்ரீரங்கம் கோயில் சுவாரசியம் குறித்து எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் நான் தரிசனம் செய்திருக்கும் பிற திவ்ய தேசங்கள் பற்றியும் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் இன்றைய பதிவுடன் ஸ்ரீரங்கம் கோயில் பற்றிய தகவல்களை முடித்துக்கொண்டு அடுத்த பதிவிலிருந்து பிற திவ்ய தேசங்களை பார்க்கலாம்.


        ஸ்ரீரங்கத்தில் ஆண்டு  முழுவதும் உத்சவம்தான். ஸ்ரீரங்கம் கோயில் உத்சவங்கள் பற்றி அதிகம் அறியாதவர்களுக்கு இந்த தகவல்கள் சுவாரசியமாக இருக்கும். அத்துடன் நான் ஆச்சர்யத்துடன் பார்த்து, ரசித்த உத்சவங்களும் இவை என்று சொல்லலாம்.


முதலில் வேடுபறி  உத்சவம்.


        வைகுண்ட ஏகாதசி ஏகாதசியை அடுத்து நடக்கும் இராப்  பத்தின்போது நடப்பது  இது. அதாவது இராப்  பத்தின் எட்டாவது நாள்  நடக்கும்  நிகழ்வு. ஆயிரம் கால் மண்டபம் அருகே இருக்கும் மணல்வெளியில் தான் இது நடக்கும்.

       

        வேடுபறி என்றால் வழிப்பறி  என்று அர்த்தம். திருமங்கை ஆழ்வார், ஆழ்வார் ஆவதற்கு முன் திருமங்கை மன்னனாக இருந்தபோது அவர் பெருமாளை வழிப்பறி செய்த  சம்பவம்தான் வேடுபறி  உத்சவத்தின் கதை.

     

        வேடுபறி ஆரம்பிப்பதற்கு முன்பு  நான் மணல்வெளியில் காலை நீட்டிக்கொண்டு அமர்ந்து கொண்டு வருபவர்கள் போகிறவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பேன். மனிதர்களை  வேடிக்கை பார்த்து  ரசிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். 


                                  குதிரை வாகனத்தில் நம்பெருமாள்


  

வேடுபறி  உத்சவம் என்றால் என்ன ?

        

        இது  திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வார் ஆவதற்கு முன்பு நடந்தது. பிற ஆழ்வார்கள் பெருமாள் முன்   பக்தி பரவசத்துடன் உருகி நின்றார்கள் என்றால் திருமங்கை ஆழ்வார் அப்படியல்ல. பெருமாளிடமே திருடனாக வந்து  நகைகளை திருடி சென்றார்.

         

        திருமங்கை மன்னனின் நிஜ பெயர் கலியன். அவரது தந்தை சோழ அரசரின் தளபதியாக இருந்தார். அப்போதே கலியன் வில் வித்தைகள் கற்று தேர்ந்து சிறந்த வீரனாக திகழ்ந்தார். அவரது வீரத்தை பாராட்டி ஆலி நாடு என்ற இடத்தை அவருக்கு பரிசாக அளித்த சோழ அரசன் அந்த இடத்தின் மன்னனாக அவரை அறிவித்தார். ஆலிநாட்டின் தலைநகர் திருமங்கை. அதனால் கலியன் திருமங்கை மன்னன் என்று அழைக்கப் பட்டார். திருமங்கை மன்னனுக்கு அன்னான் கோயிலை சேர்ந்த குமுதவல்லியை ரொம்ப பிடித்து போனது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். குமுதவல்லி வைணவத்தி ன் மீது தீவிர பற்று கொண்டவள். திருமங்கை மன்னனையும் வைணவத்திற்கு மாற்ற விரும்பினாள் . அதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் திருமங்கை தினமும் 1008 வைணவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள்.


         குமுதவல்லியை எப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானமாக இருந்த திருமங்கை அவள் போட்ட நிபந்தனைகளை ஒப்புக்கொண்டார். அதாவது தினமும் 1008  வைணவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை நிறைவேற்றலானார் . அதனால் அவரது செல்வம் கரைந்தது. இருந்தாலும் அவர் அதை நிறுத்தவில்லை. ஒரு நிலையில் கையில் பணமில்லாமல் திருட ஆரம்பித்தார். அவருக்கு இதில் சில கூட்டாளிகளும் உதவ ஆரம்பித்தார்கள். காட்டு பகுதிகளில் சென்று அங்கு வருபவர்களிடம்  பணம்  நகைகளை கொள்ளையடித்து அவற்றை விற்று 1008 வைணவர்களுக்கு தினமும் அன்னதானம் செய்வதை தொடர்ந்தார்.

       

         அவ்வாறு திருட்டும், கொள்ளையும் அன்னதானமும் தொடர்ந்து நடந்து வருகையில் ஒருநாள்  திருமங்கைக்கு புதிதாக திருமணமான ஒரு பணக்கார தம்பதி அருகில் இருக்கும் காட்டு பகுதியில் வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வந்தது. ஆஹா பணக்கார தம்பதி என்றால்  பெண்ணும் மாப்பிள்ளையும் நிறைய நகை போட்டிருப்பார்கள் , நிறைய கொள்ளை அடிக்கலாம் என்று திருமங்கை மன்னன் குழு, காட்டு பகுதிக்கு சென்றது. அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த புதுமண தம்பதி அப்பகுதி வழியாக வந்தார்கள். இருவரும்  நிறைய ஆபரணங்கள் அணிந்து வந்தனர். திருமங்கை குழு அவர்களை வழி மறித்து  ஈட்டி கம்புகளை காட்டி மிரட்டி நகைகளை பறித்துக் கொண்டார்கள். அதை ஒரு துணியில் கட்டி அந்த மூட்டையை தூக்கும்போது அதனை திருமங்கையால் தூக்க முடியவில்லை. ஏதேதோ செய்து பார்த்த திருமங்கையால் அதனை தூக்க முடியவில்லை என்றதும் சற்று பயத்துடன் அந்த மாப்பிள்ளை பையனை பார்த்தார். அங்கு நின்றது சாட்சாத் ரெங்கநாதரும் அமிர்தவல்லி தாயாரும். அப்போதுதான் திருமங்கைக்கு தான் கொள்ளை அடித்தது பெருமாளையும் தாயாரையும் என்பது  தெரிந்தது.  உடனே அவர் பெருமாளையும் தாயாரையும் விழுந்து சேவிக்க பெருமாள் அவருக்கு அருளினார். அன்றிலிருந்து திருமங்கை, திருமங்கை ஆழ்வாரானார்.


        
        இந்த சம்பவம் தான் வேடுபறி  அன்று நடித்துக் காட்டப்படும். ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாள் அன்று, மாலை மணல்வெளியில் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். மணல் வெளி பகுதி முழுவதும் நல்ல கூட்டம் இருக்கும். கோண வையாளி நடக்கும். அதன் பிறகு பெருமாள் ஆயிரம் கால் மண்டபம் அருகே சென்ற சில வினாடிகளில், ஒரு கூட்டம் (இவர்கள் தான் வழி வழியாக இதனை நடித்து காட்டுபவர்கள். இவர்கள் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. பெருமாள் பக்தர்கள்.) கையில் கம்புகளுடன் ஓடி வருவார்கள் பெருமாளை துரத்துவார்கள். அவரது ஆபரணங்களை திருடுவது போல் நடிப்பார்கள். இது பார்ப்பதற்கு  மிக நன்றாக இருக்கும். இறுதியில் திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வாராக காட்சி அளிப்பார். பெருமாள் அனைவருக்கும் அருள் செய்வார்.  இதுதான் வேடுபறி  உத்சவம்.


        நான் ஓராண்டுதான் ஸ்ரீரங்கத்தில் இருந்தேன். அதனால் ஒருமுறைதான் வேடுபறி  உத்சவம் பார்த்திருக்கிறேன்.
  
இவ்வாறு ஒவ்வொரு உத்சவமும் ஸ்ரீரங்கத்தில் சுவாரசியமானது.
   
   
  

   

 

 

Saturday 26 March 2022

ஸ்ரீரங்கம் துலுக்க நாச்சியாரின் கதை

       ஸ்ரீரங்கம் 
துலுக்க நாச்சியாரின் கதை 


                                                                        


        ஸ்ரீரங்கத்தில் மற்றும் ஒரு சுவாரசியம் துலுக்க நாச்சியார் சந்நிதி இருப்பது. வைணவக் கோயிலில் துலுக்க நாச்சியாரா என்று எல்லோரையும் போல நானும் ஆச்சர்யப் பட்டேன். கோயிலின் இரண்டாவது பிராகாரத்தில் இருக்கிறது பீ பீ நாச்சியார் எனப்படும் துலுக்க நாச்சியார் சன்னதி.

       

         துலுக்க என்றால் இஸ்லாமிய நம்பிக்கை என்று பொருள். துலுக்க நாச்சியார் எப்படி ஸ்ரீரங்கம் வந்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் 14 ஆம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டும்.


        ஸ்ரீரங்கத்தில் சுல்தானிய படையெடுப்பு இருமுறை நடந்தது என்கிறது கோயில் வரலாறு. 1311இல் ஒரு முறையும் 1323 இல் அடுத்த முறையும் என்கிறது ஒரு வரலாறு. 1311 இல் நடந்த படையெடுப்பில் தான் துலுக்க நாச்சியார் ஸ்ரீரங்கம் வந்தார்.

        ஸ்ரீரங்கம் பற்றி அதிகம் அறிந்திராத தில்லி சுல்தானின் தளபதி மாலிக் கஃபூர் தற்செயலாக காவிரி ஆற்றின் அருகே வர அங்கே இருந்த கோயிலை பார்த்து பிரமித்து போனானாம். இந்தியாவில் கோயில்கள் என்றாலே விலை மதிப்பு மிக்க ஆபரணங்களும் கடவுள் விக்கிரங்களும் இருக்கும் என்று  கேள்விப் பட்டிருக்கிறான். உடனே கோயிலை கொள்ளை அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு தனது  படைகளுடன் ஸ்ரீரங்கத்தை முற்றுகையிட்டான். உள்ளூர் மக்களால் தங்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை அரங்கனையும் காப்பாற்ற முடியவில்லை. 


        மாலிக் கஃபூர் கொள்ளையடித்த பொன் பொருள்களுடன் தில்லி திரும்பினான். ஆபரணங்கள் எல்லாம் உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றப் பட்டன . நம் பெருமாள் விக்கிரகம் மட்டும் அப்படியே வைத்திருந்தான். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவனது மகள் சுரதானிக்கு நம் பெருமாளை ரொம்ப பிடித்துவிட்டது. பிற ஆபரணங்களை போல விக்கிரகத்தை உருக்க வேண்டாம் என்றும் தனக்கு விளையாட பொம்மை வேண்டும் என்றாள். அவள் அரங்கன் விக்கிரகத்தை பொம்மை என்று நினைத்து விட்டாள். மாலிக் கஃபூருக்கு மகள் மீது கொள்ளை பிரியம். உடனே அரங்கனை அவள் கையில் கொடுத்து விட்டான். சுரதானி விக்கிரகத்தை தன்னுடனே வைத்துக் கொண்டாள்.


        அதனை தனது பிரியத்திற்கு உரிய பொம்மையாக கருதினாள். அதனை விட்டு அவள் பிரியவே இல்லை. விக்கிரகத்திற்கு தானே குளித்து விடுவாள். புத்தாடைகள் அணிவிப்பாள். ஆபரணங்கள் போட்டு அழகு பார்ப்பாள். அதனுடன் விளையாடுவாள். சாப்பாடு ஊட்டி விடுவது போல் பாவனை செய்வாள். இரவு தான் படுக்கும்போது தன்னுடனேயே படுக்க வைத்துக் கொள்வாள். இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில் தில்லி சுல்தான் நம் பெருமாளை கொள்ளை அடித்து சென்று விட்டானே அவனிடமே போய் கெஞ்சி கேட்டு வாங்கி வரலாம் என்று பக்தர்கள் குழு ஒன்று தில்லிக்கு சென்றது. அவர்கள் சுல்தானின் அரண்மனைக்கு கலாசாரக் குழு என்று சொல்லிக் கொண்டு நுழைந்தனர். அவர்களுடன் நடனமாடுபவர்களும் சென்றிருந்தார்கள். சுல்தான் முன்னிலையில் ஆடி பாடி அவனை மகிழ்வித்தார்கள்.

        சுல்தானுக்கு பரம சந்தோஷம். அவர்களது ஆடல் பாடல்களில் மனமகிழ்ந்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமானாலும் தர தயாராக இருக்கிறேன், கேளுங்கள் என்றான் சுல்தான். அன்று வைகுண்ட ஏகாதசி. உடனே பக்தர்கள் குழு எங்களுக்கு பொன் பொருள் எதுவும் வேண்டாம். எங்களது நம் பெருமாள் உங்களிடம் இருக்கிறார். அந்த விக்கிரகத்தை மட்டும் கொடுங்கள். இன்று ஏகாதசி, நாங்கள் எங்கள் கடவுளை வழிபட எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள் என்றால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றார்கள்.

        அதற்கு சுல்தானோ, "ஓ அந்த கடவுள் பொம்மையை சொல்கிறீர்களா, அது என் மகள் சுரதானியிடம் இருக்கிறது, அதை அவள் தர மாட்டாளே,  உங்களுக்கு சாமர்த்தியம் இருந்தால் அவளிடமிருந்து வாங்கி கொண்டு செல்லுங்கள், அவள் அதை கொடுக்க மாட்டாள்"  என்று சொல்லி சேவகர்களை  விட்டு சுரதானியை அழைத்து வர சொன்னார். நம் பெருமாள் விக்கிரகரத்தை அணைத்த படி வந்த சுரதானி அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டாள் . செய்வதறியாது திகைத்த பக்தர்கள் குழு இரவு அவளுக்கு தெரியாமல் அவள் இருக்கும் இடம் சென்று  அவள் தூங்கும்  போது நம் பெருமாளை அவளிடம் இருந்து மெதுவாக எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கி கிளம்பி விட்டார்கள். காலையில் எழுந்து பார்த்த போது தனது பொம்மை தன்னிடம் இல்லாதது கண்டு அழுது அவர்களிடம் சென்று பொம்மையை வாங்கியே தீருவேன் என்று தனது குதிரையில் ஏறி புறப்பட்டுவிட்டாள். அவள் புறப்பட்டவுடன் சுல்தான் ஒரு படையை அவளுக்கு துணையாக அனுப்பினான்.

        நம் பெருமாளுடன் வந்த பக்தர்கள் குழு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்து பெருமாளை கோயிலில் சேர்த்தார்கள். சில நாட்களில் சுரதானியும் வந்து சேர்ந்தாள் பெருமாள் விக்கிரகம் தன்னிடம் ஒப்படைக்கப் படவேண்டும் என்றும் அவர் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றும் சுரதானி அழுது புலம்பினாள் ஆனால் அவளை கோயிலுக்குள் விட பக்தர்கள் மறுத்து விட்டார்கள். அழுது புலம்பி அந்த இடத்தை விட்டு அகல மறுத்த சுரதானி இறுதியில் அப்படியே மயங்கி விழுந்து சில மணி நேரத்தில் இறந்தே போனாள். அவள் உடலிலிருந்து உயிர் பிரிந்த மறு  வினாடி அவள் உடலிலிருந்து ஒரு ஜோதி  வெளிப்பட்டு ரங்கநாதரிடம்  சென்றடைந்தது.

         "சுரதானிக்கு என்  மீது இருக்கும் அளவு கடந்த பக்தியை கண்டோம். அவர் எனது நாச்சியார்களில்  ஒருவராகிறார்"  என்று பெருமாள் அசரீரியாக கூறினார்.

         இதற்கிடையில்  தனது மகள் இறந்து விட்டாள்  என்பதை கேள்விப்பட்டு மாலிக் கஃபூர் ஸ்ரீரங்கத்தை நோக்கி அதி  கோபத்துடன் தனது படைகளுடன் வந்தான் . மாலிக் கபூர் வருவதை அறிந்த பக்தர்களும் கோயில் பட்டாச்சாரியார்களும் அவசர அவசரமாக மூலவரையும் உத்சவரையும் வெளிப்புறத்திலிருந்து காண முடியாதபடி சுவர் எழுப்பினார்கள். இன்றும் அது இருக்கிறது. மூலவரை வெளிப்புறத்திலிருந்து காண முடியாது. பெருமாளை தரிசிக்க வேண்டுமானால் உள்ளே வந்தாக  வேண்டும்.

        கோபத்துடன் மாலிக் கஃபூர் படைகள் ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் தில்லி திரும்ப வேண்டியதாயிற்று. அதற்கு பின்  அடுத்து வந்த சுல்தான் 12 ஆண்டுகள் கழித்து 1323 ல் பழி வாங்கும் வகையில்  ஸ்ரீரங்க படையெடுப்பை நிகழ்த்தினான். அது ஸ்ரீரங்கத்தில்  சுல்தான்களின் இரண்டாம் படையெடுப்பு.

         ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாளின் விருப்பப்படி  சுரதானிக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டது. பெருமாள் தலைமை பட்டரின் கனவில் வந்து சுரதானி தனது நாச்சியார்களில் ஒருவராக கருதப்படவேண்டும் என்றார். அதன் படியே அவர் துலுக்க நாச்சியார் என்றும் பீபீ நாச்சியார் என்றும் அழைக்கப்  பட்டார். இரண்டாம் பிரகாரத்தில் அவருக்கு சந்நிதி அமைக்கப்பட்டது. இஸ்லாம் மதத்தினருக்கு உருவ வழிபாடு இல்லை என்பதால் சந்நிதி சுவற்றில் துலுக்க நாச்சியாரின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். இஸ்லாம் பெண்கள் முகத்தை  மூடிக் கொள்வது வழக்கம் என்பதால் துலுக்க நாச்சியாரின் ஓவியமும் அப்படியே அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும்  துலுக்க நாச்சியாருடன் பெருமாளுக்கு கல்யாண உத்சவம்  நடத்தப படுகிறது. காலை உணவாக ரொட்டி, வெண்ணெய் மற்றும் சர்க்கரை முகலாய பாணியில் தயாரிக்கப்பட்டு முதலில் துலுக்க நாச்சியாருக்கும்  அதன் பின்னர் பெருமாளுக்கும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

        பக்திக்கு மதம் தடையில்லை என்பதை துலுக்க நாச்சியார் காட்டுவதாகவே எனக்கு தெரிகிறது


Sunday 13 March 2022

வெள்ளாயியும் வெள்ளை கோபுரமும்




ஸ்ரீரங்கம் கோயில்


வெள்ளாயியும்  வெள்ளை கோபுரமும்  


வெள்ளை கோபுரம்
   வெள்ளை கோபுரம்



        ஸ்ரீரங்கம் கோயில் என்னை பிரமிக்க வைத்தது போலவே அதன் கோபுரங்களும் என்னை வியக்க வைத்திருக்கின்றன. தமிழ் நாட்டில் உள்ள பிரபல கோயில்கள் அனைத்துமே உயர்ந்த கோபுரங்களை உடையது தான். ஆனால் ஸ்ரீரங்கம் கோயில் கோபுர வரலாறு சற்றே வித்தியாசமானது. சுவாரசியமானது.  


        ஸ்ரீரங்கம் கோயில் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் இருக்கிறது என்று எனது முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். அதில் இன்று நாம் பார்க்கப் போவது வெள்ளை கோபுரம் பற்றியது.
 
   
         ஸ்ரீரங்கம் கோயிலில் 21 கோபுரங்கள் இருக்கிறது. கோயிலின் தெற்கே இருக்கும் ராஜ   கோபுரமும்  கிழக்கே இருக்கும் வெள்ளை கோபுரமும் பல விதங்களில் வியப்பை ஏற்படுத்துபவை. நான் ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது ஒரே வழியில் கோயிலுக்கு செல்ல மாட்டேன். ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு வழியாக போவேன். அப்படி முதல் முறையாக வெள்ளை கோபுரம் வழியாக சென்றபோது  அந்த கோபுரம் ஏன் வெண்மையாக இருக்கிறது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஆனால் எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. கோயில் ஒழுகு புத்தகமும் தி இந்து நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையும் எனது கேள்விக்கு சரியான பதிலை அளித்தன.

 
         இந்த நிகழ்வு 14 வது நூற்றாண்டில் நடந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 1323 ஆம் வருடம். அப்போது தான் தென் இந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பு நிகழ்ந்தது. தென் இந்திய கோயில்களில் சுத்த  தங்க வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பல பொக்கிஷங்கள் இருப்பதை கேள்விப்பட்டு அதை கொள்ளையடிக்க அப்போதைய  சுல்தான்கள் இங்கு படையெடுத்து வந்தார்கள். அவ்வாறு வந்த  சுல்தானிய  படையிடம் ஸ்ரீரங்கமும் வீழ்ந்தது. கோயிலில் பெரும் பொக்கிஷம் கொட்டிக் கிடைக்கிறது என்பதை புரிந்து கொண்டு கோயிலை சுற்றி வளைத்தன  சுல்தானிய படைகள். 


கம்பிரமான ராஜ கோபுரம்
வண்ணமயமான  ராஜ கோபுரம்



         பெருமாள் பக்தர்கள்  நிறைந்த ஸ்ரீரங்கத்தில் சுல்தானிய படைகளை உள்ளூர்வாசிகள் எதிர்க்க அவர்களை கொன்று குவித்தன படைகள். இதில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாண்டார்கள். ஸ்ரீரங்கம் முழுவதும் சுல்தானிய படைகளின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பொன்னையும் பொருளையும் கொள்ளை அடித்தும் கூட சுல்தானிய படைகளுக்கு திருப்தி இல்ல. சுல்தானிய படை தளபதிக்கு நம் பெருமாளை(உத்சவர்) எப்படியும் கொள்ளை அடித்து சென்று விட  வேண்டும் என்கிற தணியாத வேகம் இருந்தது. அதனுடன் மேலும் பல பொக்கிஷங்களும் கோயிலுக்குள் இருக்கிறது , அதனை முழுவதுமாக கொள்ளை அடித்தவுடன்தான் ஸ்ரீரங்கத்தை விட்டு செல்ல வேண்டும்  என்று தளபதி நினைத்திருந்தான்.


          ஸ்ரீரங்கம் கோயில் தாசி (அப்போது தேவதாசி முறை இருந்தது.)வெள்ளாயி  அம்மாள் என்பவர். நடனம் மூலம் இறை பணி செய்து வந்தவர். அரங்கனின் பரம பக்தை. சுல்தானிய படைகள்  நம் பெருமாளை நெருங்கி விடக்  கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார். அதனால் தினமும் படை தளபதி முன் நடனமாடி அவனது கவனத்தை சிதற அடித்தார். நன்கு பழகுவது போல் நடித்தார். இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்த வைணவ ஆச்சாரியரான பிள்ளை லோகாச்சாரியார் கோயிலுக்குள் நம் பெருமாள் விக்கரகம் இருந்தால் ஆபத்து அதனை எப்படியும் சுல்தானிய படைகள் திருடிவிடும் என்று கருதி   மிக ரகசியமாக நம் பெருமாளை கோயிலிலிருந்து  எடுத்துக்கொண்டு மதுரையை நோக்கி சென்றுவிட்டார். இதனை அறிந்த வெள்ளாயி  பிள்ளை லோகாச்சாரியார் விக்ரகத்தை  எடுத்து சென்றுவிட்டார் என்ற செய்தி சுல்தானிய படைகளுக்கு தெரிந்து விட்டால் அவரை விரட்டி பிடித்துவிடும் என்று  புரிந்து கொண்டு ஒரு ஐடியா செய்தார்.


        பிள்ளை லோகாச்சாரியார் நம் பெருமாளுடன் சென்றது கொஞ்சமும் சுல்தானுக்கு தெரியக்கூடாது என்று சுல்தானை திசை திருப்ப அன்று இரவு முழுவதும் சுல்தானை மகிழ்விக்கும் வகையில் நடனமாட ஆரம்பித்தார். சுல்தான் ஏற்கனவே வெள்ளாயியின் அழகில் மயங்கி இருக்கிறவன். வெள்ளாயி ஆட ஆட சுல்தான் மயங்கி விட்டான். இதுதான் தக்க தருணம் என்று வெள்ளாயி , சுல்தானிடம் கோயிலில் இன்னும் நிறைய தங்கமும் வைரமும் வைடூரியமும் இருக்கிறது , வாருங்கள் காட்டுகிறேன் , இந்த கோபுரத்தின் மேலே ஏறி  போய் அங்கிருந்து பார்த்தால் , ஆபரணங்களும் நம்பெருமாள் விக்கிரகம் இருக்கும் இடமும் தெரியும் வாருங்கள் என்று சொல்லி கிழக்கு கோபுரம் மேலே சுல்தானை கூட்டி சென்றாள் . சுல்தானும் ஆசையுடன் சென்றான். இதோ இங்கு பாருங்கள் , இங்கே இங்கே என்று சொல்லி சுல்தானை கோபுரத்தின் உச்சியிலிருந்து தள்ளி விட்டாள் . 
சுல்தான் தலை குப்புற விழுந்து இறந்தான். சுல்தான் இறந்து விட்டது தெரிந்தால் சுல்தானிய படைகள் தன்னை சும்மா விடமாட்டார்கள் என்பது வெள்ளாயிக்கு  நன்கு தெரியும். உடனே ரங்கா ரங்கா என்று அரங்கனின் பெயரை ஜபித்தபடியே அவளும் கிழக்கு கோபுரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தாள் .


         செய்தி அறிந்த உள்ளூர் மக்கள் ஓடி வந்தனர். வெள்ளாயியின் தியாகம் அவர்களை மெய்  சிலிர்க்க வைத்தது  தலைவனை இழந்த சுல்தானிய  படை செய்வதறியாது திகைத்து நிற்கையில் விஜய நகர படைகள் அவர்களை விரட்டி அடித்தன. வெள்ளாயியின் தியாகம் பற்றி அறிந்த விஜய நகர படையின் தலைவர் கெம்பண்ணா  கிழக்கு கோபுரத்தை வெள்ளாயியின் நினைவாக வெள்ளை கோபுரம் என்று அழைக்கலாம் என்று அறிவித்தார்.  கிழக்கு கோபுரத்திற்கு வெள்ளை நிற பெயிண்ட் அதிலிருந்து அடிக்கப்பட்டது.  இன்றும் கிழக்கு கோபுரம்  வெள்ளாயியின் நினைவாக, தியாகத்தின் அடையாளமாக, வெண்மையாக உயர்ந்து நிற்கிறது.  1323யில்  ஸ்ரீரங்கத்திலிருந்து சென்ற நம்பெருமாள் விக்கிரகம் 1371இல் மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டுவரப்பட்டதாக ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு சொல்கிறது.

Wednesday 9 March 2022

நேரம் நம் வசப்படும்

     கனடாவில் 

நேரம் நம் வசப்படும் 



கனடாவில் குளிர் காலம் முடிந்து வசந்த காலம் எனப்படும் spring  சீசன் ஆரம்பிக்கப் படவிருக்கிறது. இப்போது ஒரு சுவாரசியமான நிகழ்வு நடக்கும். அதாவது கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னதாக வைப்பார்கள். குழப்பமாக இருக்கிறதா ? விளக்குகிறேன்.

     குளிர் காலத்தில் இங்கு மிக விரைவில் இருட்டி விடும். அதாவது மதியம் 3.30 க்கே இருட்டிவிடும். 3 மணிக்கே லேசாக இருட்ட  ஆரம்பித்து 3.30க்கு நன்கு இருட்டி விடும். 3.30 மணிக்கே வீடுகளில், சாலைகளில்  கட்டிடங்களில் மின் விளக்குகள் போட்டாக வேண்டிய நிலை. ஆனால் குளிர் காலம் முடிந்து ஸ்ப்ரிங் ஆரம்பிக்கும் போதே வெளிச்ச நேரம் அதிகரிக்க ஆரம்பமாகும். ஸ்ப்ரிங் முடிந்து கோடை  ஆரம்பிக்கும்போது சூரிய அஸ்தமனம் இரவு 9 லிருந்து 9.15 க்குள் இருக்கும்.

     ஸ்ப்ரிங் ஆரம்பம் ஆகும்போது பகல் நேரம் அதிகரிக்க துவங்குகிறது என்பதால் daylight saving time என்பதை பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். தமிழில் பகலொளி சேமிப்பு நேரம் என்று சொல்லலாம். பகல் நேரம் அதிகரித்து இரவு நேரம் குறைகிறது. அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம் 7 மணி 8 மணி 9 மணி என்று கோடை நெருங்க நெருங்க அதிகரிக்கும். இரவு 9 மணி வரை  சூரிய வெளிச்சம் இருப்பதால் நாம் மின் விளக்கை 9 மணிக்கு மேல் பயன்படுத்திக் கொள்ளலாம். இரவு நேரம் குறைந்து பகல் நேரம் அதிகரிப்பதை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் கடிகாரத்தை ஒருமணி நேரம் முன்னதாக வைத்துக் கொள்கிறார்கள். அதே போல் கோடை முடிந்து, இலையுதிர் காலம் துவங்கி முடிகையில் அதாவது  நவம்பரில், கடிகாரத்தை ஒரு மணி நேரம் பின்னதாக வைத்துக் கொள்கிறார்கள். முன்னதாக வைக்கப் படுவது spring  forward  என்றும்  பின்னதாக வைக்கப் படுவது Fall back என்றும் அழைக்கப் படுகிறது.

       இந்த நடைமுறை தனி மனித முடிவல்ல. அரசாங்கம்,  சட்டம் இயற்றி  நடைமுறைக்கு வந்தது.  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிறு கிழமை அன்று, daylight  saving time துவங்கும். அதிகாலை 2 மணியிலிருந்து  இது துவங்கும். மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிறு, இந்த ஆண்டு மார்ச் 13 அன்று வருகிறது. எனவே மார்ச் 13  அன்று அதிகாலை 2 மணிக்கு  அனைத்து  கடிகாரங்கள் , செல் போன்கள் , கம்ப்யூட்டர்கள்  மற்றும் மின்னனு சாதனங்கள் அனைத்திலும் நேரம் தானாகவே மாறிவிடும். அதாவது அதிகாலை 1.59 க்கு பின் 2 மணி என்று மாறுவதற்கு பதில் 3 என்று மாறிவிடும். நாம் அதை பற்றி யோசிக்க வேண்டிய தேவை இல்லை. காலை 6 மணிக்கு நாம் எப்போதும் போல் எழுவோம்.  அப்போது உண்மையில் மணி 5 தான் இருக்கும். அது  நமது கட்டுப்பாட்டில் இல்லாததால் நம்மை இது பாதிப்பதில்லை. ஆனால் மின்னணு கடிகாரம் அல்லாத கடிகாரங்களில் நாம் நேரத்தை முன்னோக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 

     சுருக்கமாக சொன்னால் தூங்கும் நேரம் ஒரு மணி நேரம் குறைகிறது.

     இது கனடாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா , பிரிட்டன் ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் பின்பற்றப் படுகிறது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வழக்கம் இல்லை. காரணம் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் பூமத்திய ரேகை அருகே இருப்பதால் குளிர் மற்றும் கோடை கால வித்யாசம் அதிகம் இருப்பதில்லை. பெரும்பாலும் இந்த நாடுகள் வெப்பம் அதிகம் உள்ள நாடுகள்.

    daylight saving  time  மூலம் என்ன ஆதாயம் இந்த நாடுகளுக்கு? மின் சக்தி சேமிப்பு ஆகிறது, குளிர் காலத்தில் பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபட முடியாத மக்களால் கோடையில் நன்கு அனுபவிக்க முடியும். வியாபார  இடங்கள் இரவு 9 மணி வரை திறந்து இருப்பதால் வியாபாரம் நன்கு நடக்கும். (குளிர் காலத்தில் மால்கள் 5 மணிக்கே மூடி விடுவார்கள்.)

     மின் சக்தி சேமிப்புக்காக daylight saving time முதல் உலகப் போரின்போது முதல் முதலாக ஜெர்மனியால் கொண்டு வர பட்டது. முதலாம் உலகப் போர் சமயத்தில் எரி  சக்தி சேமிப்பு ஜெர்மனிக்கு அதிகம் தேவை பட்டதால்  daylight  saving  time யை  அது அமல் படுத்தியது.  இரண்டே  வாரங்களில் பிரிட்டனும் இதில் சேர்ந்து கொண்டு, தனது  நாட்டில் நடை முறைக்கு கொண்டு வந்தது. 1918இல் அமெரிக்கா இவர்களை பின்பற்றியது. பிறகு வேறு சில குளிர் நாடுகளும் இதனை பின்பற்ற ஆரம்பித்தன. ஆனால் அதற்கு முன்னதாகவே கனடாவில் கொண்டு வர பட்டுவிட்டது என்கிறது இதன் வரலாறு.  

    உலகில் இப்போது 40 சதவீத  நாடுகள் daylight  saving  time  பின்பற்றுகின்றன. இதனை நடைமுறை படுத்தியிருந்த ரஷ்யா 2014 இல் இந்த பழக்கத்தை நிறுத்திக் கொண்டது. 

      பல நாடுகள் இதனை பின்பற்றினாலும்  பொது மக்களை  கேட்டால் இதனை விரும்பவில்லை என்றே சொல்கிறார்கள்.  இன்னும் பல நாடுகளில் இது தேவையா தேவையற்றதா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக மூத்த குடி மக்களுக்கு இது பிடிக்கவில்லை. தூக்க நேரம் குறைவதை  அவர்கள் விரும்பவில்லை. 

      மின்னணு  சாதனங்களில் daylight  saving  time  ஆரம்பிக்கும்போதும்  நவம்பரில்  fallback  எனப்படும் ஒருமணி நேரத்தை  பின்னால்  வைக்கும் நிகழ்வும் தானியக்கமாக  நடந்து விடுகிறது. கடிகாரங்களில் நாம்தான் வைக்க வேண்டும். 

      பிரிட்டனில் ராணியின் அரண்மனையில்  1000  சுவர் கடிகாரங்கள் இருக்கின்றனவாம். இதனை   பணியாளர்கள் ஒரு மணி நேரம் முன்னோக்கி வைக்க 50  மணி நேரம் ஆகிறதாம்.  நவம்பரில் பின்னோக்கி வைக்கவும்  இதே கதைதான். 

        இந்த இடத்தில் ஒரு சின்ன flashback . சென்னையில் நான் பனி புரிந்து கொண்டிருந்த  சமயம். என் பெண்  பள்ளியில் படித்து கொண்டிருந்தாள். நானும்  கணவரும் அலுவலகம் செல்ல வேண்டும். காலையில் வீடு படு பிஸி யாக இருக்கும். பெண்ணுக்கு காலை உணவு, கையில் கொடுத்து விட மதிய உணவு தயார் செய்ய வேண்டும். அவளை கணவர் பள்ளியில் கொண்டுபோய் விட்டு விட்டு வருவதற்குள் எங்களுக்கு உணவு தயார் செய்ய வேண்டும். அதன்பின் இருவரும் அலுவலகத்திற்கு தயாராக வேண்டும். நேரம் சிட்டாய் பறக்கும். திரும்பிப் பார்ப்பதற்குள் மணி ஆகிவிடும். மூவரும் பள்ளி மற்றும் அலுவலகம் சரியான  நேரத்திரத்திற்கு செல்ல நாங்கள் எங்கள் வீட்டு சுவர் கடிகாரத்தை ஒரு மணிநேரம் முன்னதாக  அதாவது fast  ஆக வைத்திருப்போம்.நேரம் அதிகமாகிவிட்டது என்கிற உணர்வில் சீக்கிரம் அலுவலகம் செல்வோம் என்கிற  நம்பிக்கையில்.

     நாங்கள் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னதாக வைத்திருப்பதை என் தம்பிகள் எங்கள்  வீட்டிற்கு வரும்போதெல்லாம் கிண்டல் செய்வார்கள். 5 நிமிடம் 10 நிமிடம் fast  வைப்பார்கள்  கேள்வி பட்டிருக்கிறோம், ஆனால் இப்படி ஒரு மணி நேரம் யாராவது வைப்பார்களா  என்று  பரிகாசம் செய்வார்கள். எங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே கடிகாரத்தில் மணி வைத்துப் பழக்கம் ஏற்பட்டுவிட்டதால்  எங்கள் வீட்டு கடிகார நேரத்தை நம்ம clock  நேரம் என்போம். எங்காவது செல்ல வேண்டும் என்றால் நம்ம clock இல் இத்தனை  மணி ஆகும் போது கிளம்ப வேண்டும் என்று பேசிக் கொள்வோம். என்  கணவர் இதற்கு ஒரு படி மேல். எங்கள் சொந்த ஊர்  மஹாபலிபுரம் அருகே உள்ளது.  ஒரு முறை அங்கு சென்றிருந்த என் கணவர் அங்கிருந்து எங்களுக்கு phone  செய்து 'நம்ம clock இல் time  என்னம்மா?' என்று கேட்டார். எங்கள் வீட்டு கடிகாரத்தில் ஒரு மணி நேரம் fast என்பது எங்கள் உறவு மற்றும் சுற்று வட்டத்தில் பிரபலம் .

       அன்று நாங்கள் வீட்டில் ஒரு மணி நேரம் கடிகாரத்தை முன்னதாக வைத்தோம். ஆனால் இங்கு கனடாவில் நாடே ஒரு மணி நேரம் கடிகாரத்தை முன்னதாக வைக்கிறது. 

Sunday 6 March 2022

நானும் திவ்ய தேசங்களும் - 1

    நானும் திவ்ய தேசங்களும் - 1


பெரிய பெருமாள்


        சில நாட்களுக்கு முன்  ஹைதராபாத்தில் ஷம்ஷாத்பாத்தில் 216அடி உயரத்திற்கு வைணவ ஆச்சாரியார் ஸ்ரீ ராமானுஜருக்கு சிலை நிறுவப்பட்டது. அது சமத்துவத்தின் சிலையாக  கருதப்படுகிறது . இது அனைவரும் அறிந்த விஷயம்தான். 108 படிகள் கட்டப்பட்டு அதற்கு  மேல் ராமானுஜர் சிலை அமைக்கப் பட்டிருக்கிறது. அதேபோல் அந்த வளாகத்தை  சுற்றி 108 திவ்யதேச பெருமாள்களுக்கும் சந்நிதி கட்டப்பட்டிருக்கிறது. சிலை திறப்பு நடந்து முடிந்த சில நாட்களில் 108 பெருமாள்களுக்கும் திருக் கல்யாண  வைபவமுமும் த்ருதண்டி சின்ன ஜீயர் ஸ்வாமிகள் நடத்தினார். அந்த வைபவத்தை நேரலையில்  பார்த்த போது அதில் சில திவ்ய தேசங்களுக்கு நாங்கள் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து வந்தது நினைவுக்கு வந்தது. நாங்கள் சென்று தரிசனம் செய்துவந்த சில திவ்ய தேசங்கள் பற்றி இங்கு எழுதலாம் என்று நினைத்தேன். வரிசை கிரமாக இருக்காது. 

       திவ்ய தேசங்களில் முதலாவது ஸ்ரீரங்கம். 108 வது வைகுந்தம் . நம்மால் இந்த பூலோகத்தில் இருக்கும் 107 திவ்ய தேசங்களைத்தான்  தரிசிக்க முடியும். இந்த  உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டவுடன் தான் 108 வதை தரிசிக்கலாம். திவ்ய தேசங்களில் முதலாவதாகிய ஸ்ரீரங்கத்தில் நான் ஓராண்டு இருந்தேன். நான் வைணவ குடும்பத்தில் பிறந்தேன். திருமணம் ஆனது வீர வைணவ குடும்பத்தில். திருமணத்திற்கு பின் தான் வைணவம் பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். கணவர் வீட்டில் அனைவரது பேச்சுகளிலும் ஆழ்வார்கள், ஆண்டாள்,  பிரபந்தம் , திவ்ய தேசங்கள் என்பது அதிகம் அடிபடும். வீட்டில்  கைவேலைகள் ஏதாவது செய்யும் போது கூட ஆழ்வார் பாசுரங்களை தான் முணுமுணுப்பார்கள். அந்த அளவிற்கு வைணவ பக்தர்கள். அதனாலும் எனக்கு வைணவத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. 


          சென்னையில் இருந்த நான் வாழ்க்கையின் சூழலால் ஓராண்டு திருவரங்கத்தில் இருக்க நேரிட்டது.  ஸ்ரீரங்கம் கோயில் பற்றி அதிகமாக  தெரிந்து கொண்டேன். கோயில் பற்றி நிறைய புத்தகங்கள் படிக்கலானேன். தினமும் கோயிலுக்கு செல்வேன். ஸ்ரீரங்கம் கோயில் என்னை பிரமிக்க வைத்தது . வைணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீரங்கம் கோயிலைதான் குறிக்கும். பெரிய என்கிற அடைமொழி இதற்கு உண்டு. கோயில், பெரிய கோயில், மூலவர் ரங்கநாதர்: பெரிய பெருமாள், தாயார்: பெரிய பிராட்டியார், மண்டபம்: பெரிய திருமண்டபம், பெருமாளுக்கான நைவேதியம், பெரியவசரம் என்று எல்லாமே பெரிய என்கிற அடைமொழி தான். அனைத்து  ஆழ்வார்களாலும் பாடல்பெற்ற ஸ்தலம் . நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீ ராமானுஜர் என்று ஆச்சார்யர்கள் வசித்த இடம் திருவரங்கம். 


ரங்கா ரங்கா மண்டபம்

         பெரிய பெருமாள் திருவரங்கம் வந்தது சுவாரசியமானது. ராமாயண காலத்திற்கு முன்பு நடந்தது இது .சத்யலோகத்தில் வழிபடப்  பட்டுவந்த பெரிய பெருமாளை பூலோகத்திற்கு அனுப்புமாறு கடும் தவம் செய்து அயோத்தி  மன்னன் இஷுவாகு பிரம்மாவிடம்  கேட்டான். இஷுவாகுவின் வேண்டுதலுக்கு ஏற்ப பிரம்மாவும் பெரிய பெருமாளை அனுப்பினார். ப்ரணவக்கார விமானத்துடன் பெரிய பெருமாள் அயோத்தி வர, இஷ்வாகு மன்னன் தினமும் பூஜிக்கலானார். இது ராமாயண காலத்திலும் தொடர்ந்தது. ராமரூம்  தினமும் பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட்டார். இலங்கையில் போர் முடிந்ததும், அயோத்தி வந்த ராமரிடம் விபீஷணன் விடைபெற்று கொள்ளும் போது, ராமர் ரங்கநாதரை விபீஷணனிடம் கொடுத்து இலங்கைக்கு எடுத்து சென்று வழிபடுமாறு சொன்னார். மனமகிழிந்த விபீஷணன் ப்ரணவக்கார  விமானத்துடன் பெரிய பெருமாளை  வான் வாழியே எடுத்து வரும்போது காவேரி கொள்ளிடம் நடுவே பெருமாளை இறக்கி வைத்து பங்குனி உற்வசத்தை நடத்திகிறார்.முடிந்ததும் பெருமாளுடன் இலங்கை சொல்ல கிளம்பியபோது பெருமாள், எனக்கு இங்கிருக்க ரொம்ப பிடித்திருக்கிறது, நீ இலங்கைக்கு செல், நான் தெற்குபுறமாக சயனம் செய்கிறேன். நீ என்னை எப்போதும் வழிபடமுடியும் என்று சொல்ல, விபீஷணன் பெருமாளின் வார்த்தைக்கிணங்க இலங்கை திரும்பினார். அதனால் தான் பெருமாள் தெற்கு நோக்கி பார்த்தவாறு சயனக் கோலத்தில் இருப்பார்.


விமானம்


        கோவிலில் 54 சன்னதிகள் உண்டு. சன்னதிகளின் வரலாற்றை அங்கிருக்கும் பட்டாச்சாரியார்களிடன் கேட்டு அறிந்து கொண்டேன். சக்கரத்தாழ்வார் சன்னிதி, ராமானுஜர் சன்னிதி, மேட்டழகிய சிங்கர் சன்னிதியின் படிகள், ஆயிரம் கால் மண்டபம், இங்கெல்லாம் அதிக நேரம் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருக்கிறேன். கம்பத்தடி ஆஞ்சனேயர் சன்னிதி அருகே நின்று ஹனுமன் சாலிசா சொல்வேன் (புத்தகம் பார்த்துதான்).

        கோயில் ஒழுகு புத்தகம் வாங்கி ஸ்ரீரங்கம் கோயில் பற்றி பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். இங்கு கனடா வந்த பின் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் தவறாமல் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசித்து விடுவேன்.

        இங்கு  கனடாவில் நமது ஊர் போன்ற கோவில்களுக்கு போக முடியவில்லை என்கிற வருத்தம் நிறைய இருக்கிறது. இருந்தாலும் மனக்கண்ணில் அரங்கனை, ராமானுஜரை, சக்கரத்தாழ்வாரை, ஆஞ்சனேயரை தரிசித்து மகிழ்கிறேன்.

        ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் தொண்டரடிபொடியாழ்வார் சன்னதியை கடக்கும் போது என்னையறியாமல் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' கதைத்  தொகுப்பில் இருக்கும் 'திண்ணா' கதையும் எனக்கு நினைவுக்கு வரும். திண்ணா, தொண்டரடிபொடியாழ்வார் சந்நிதியில் அமர்ந்து திண்ணா உபந்யாசம் செய்வதை சுஜாதா அழகாய் வர்ணித்திருப்பார், அது எனக்கு நினைவுக்கு வரும்.

        கோயில் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் உண்டு. அதை அடுத்தடுத்து பார்க்கலாம்.

Tuesday 22 February 2022

பனிப்பொழிவு : அழகா அவஸ்தையா?

பனிப்பொழிவு : அழகா அவஸ்தையா?


எங்கள் வீட்டின் வெளியே பாற்கடலை ஸ்நோ


ஸ்நோ இன்னும் முடிந்தபாடில்லை .பிப்ரவரி ஆரம்பித்ததிலிருந்து கடும் பனிப்பொழிவு கனடாவில். அதுவும் நாங்கள் இருக்கும் ஆட்டோவா வில் ஸ்நோ வும் அதிகம். குளிரும் கடுமையாக இருக்கும். இரு வாரங்களுக்கு முன்னர் 40 cm உயரத்திற்கு தரையில் படிந்திருந்த ஸ்நோவே இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. உருகவும் இல்லை. அதற்குள் நேற்று முன்தினம் முழுவதும் கடும் பனிப்பொழிவு. தொடர்ந்து பனி பொழிந்து கொண்டே இருக்க, நடைபாதை, சாலைகள் வீட்டு வெளிப்புறங்கள், என்று அனைத்து இடங்களும் பனியால் நிறைந்து காணப்பட்டது. பூட்ஸ் அணிந்து காலை வெளியே வைத்தால் முழங்காலுக்கு சற்று கீழ்வரை பனிக்குள் கால் சென்றது. ஊரே ஸ்நோவால் போர்த்தப்பட்டது போல காட்சியளித்தது.

கார் பார்க்கிங்கில் அனைத்து கார்களையும் ஸ்நோ போர்த்திக் கொண்டிருந்தது  .அபார்ட்மெண்ட்களில் நிர்வாகம், அபார்ட்மெண்ட் நடைபாதைகள் ஸ்நோ அகற்றும் மெஷின் மூலம் பனியை அகற்ற, மீண்டும் சில நிமிடங்களில் பனி பொழிந்து அந்த இடங்களை ஆக்ரமித்து கொண்டது. 

நான் ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். தூள் உப்பை கொட்டிவைத்தது போல் ஊரே காணப்படுகிறது. கார் எடுப்பது கஷ்டம் வெளியே செல்வது கஷ்டம். தனி வீடுகளில் இருப்போர் ஸ்நோ குவிய குவிய அதை அகற்றியாக வேண்டும் எங்கே போய் கொட்டுவது? அவரவர் அவரது வீட்டருகே குவிப்பார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பனி, மலை போல் குவிக்கப் பட்டிருக்கும் .

ஸ்நோ பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். இப்படி குவிய குவிய சிரமம் தான் கஷ்டம் தான். கார் மேலிருந்து ஸ்நோவை அகற்றுவது சுலபமான காரியமில்லை. பார்க்கிங்கில் முழவதும் ஸ்நோ, கார் மீதும் ஸ்நோ, ஸ்நோவில் நின்றுதான் ஸ்நோவை அகற்ற வேண்டும். ஸ்நோ அகற்றும் நீண்ட பிடியுள்ள பிரஷை பிடித்துக்கொண்டு அதனை அகற்றுவது பிரம்ம பிரயத்தனம். அதுவும்  அந்த குளிரை தாக்குப்பிடித்தப்படி  அகற்றுவது மிகவும் கடினம். கையுறை போட்டிருந்தாலும் கைகள் உறைவது போன்று இருக்கும்.

காரில் பனிமட்டும் மூடியிருந்தால் பிரஷ் வைத்து அகற்றிவிடலாம்.அனால் பனிப்பொழிவுக்கு பின் வெப்பநிலை மைன்ஸ்சில் சென்றுவிடுவதால் பல சமயங்களில் பனி ஐஸ்ஸாக உறைந்துவிடும். பிரஷை வைத்து ஐஸ்ஸை அகற்ற முடியாது. காரில் இருக்கும் டீபிராஸ்டெர் ஆன் செய்தால் கரைந்து விடும். ஐஸின் தடிமனை பொறுத்து அதற்கான நேரம் ஆகும். 

பனியை நீக்கி நாம் வெளியே கிளம்புவது என்பது பெரும் பணிதான்.  



பனி அகற்றும் பணி


பனி  பொழியும் நாட்களில்.பனி கொட்டி தீர்த்ததும் சாலைகளில் பனி அகற்றும் மாநகராட்சி வாகனங்களை அதிகம் பார்க்க முடியும். சாலைகளில் நடை பாதைகளில் இருக்கும் ஸ்நோவை வாரி சாலையின் ஓரத்தில் குவித்துவிட்டு போய்விடுவார்கள். அள்ளிக்கொண்டு போய் எங்கே கொட்டுவது . ஊரே ஸ்நோ மயமாக  இருக்கும்போது என்ன செய்ய முடியும் .சிறிது நேரத்தில் உப்பு வண்டி வரும் . கல் உப்பை வாகனத்தில் நிரப்பி இருப்பார்கள். பச்சை நிறத்தில் இருக்கும் அந்த கல் உப்பு. அதனை வாகனத்தின் பின்புறத்தில் இருக்கும் சாதனம் சாலையில் உதிர்த்துக்கொண்டே போகும் . அதாவது உப்பு ஸ்நோவை சீக்கிரம் கரைக்க. அபார்ட்மெண்ட்களில் நடக்கும் இடங்களில் இந்த உப்பை தூவி இருப்பார்கள். 

சிறிது நாள்களில் சாலை ஓரங்களில் குவிக்கப்பட்ட ஸ்நோ வாகனங்களின் கார் புகையால் கருப்பாகி கனமாகி பாறை போல் ஆகிவிடும். அதன் மேல் உப்பை கொட்டி கொட்டி கரைப்பார்கள். அதற்குள் கோடை ஆரம்பித்துவிடும். வெயிலில் எல்லாம் கரைந்து ஓட துவங்கும். (கனடா அரசு ஸ்நோவை அகற்ற, ஆண்டுதோறும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் என்று இங்கு செய்திதாள்களில் படித்தேன் )


ஸ்நோவில் மூழ்கிய பார்க்கிங் ஏரியா


இங்கு கனடாவில் இருக்கும் சில இந்திய பெண்கள் நடத்தும் youtube  சானெல்களை நான் சமயங்களில் பார்க்கிறேன். ஸ்நோ  கொட்டுவதை, கொட்டிக்கொண்டிருப்பதை, வீடியோ  போட்டு "பார்த்தீர்களா? எவ்வளவு அழகாக இருக்கிறது  நாங்கள் ஸ்நோ பொழிவு பார்த்து பரவசம் அடைகிறோம் இங்கு எல்லோருமே இப்பிடித்தான், ஸ்நோ  எப்போதடா வரும் என்று காத்திருப்பார்கள்" என்று ஏதோ யாருக்கும் கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம் தங்களுக்கு கிடைத்த மாதிரி பேசுவார்கள்.  ஸ்நோ வை பார்ப்பதே ஆனந்தம் அற்புதம் ஆஹா ஒஹோஒ என்று அளப்பார்கள் . ஸ்நோ  சமயங்களில் வெளியில் செல்வது எவ்வளவு கடினம், அதை அகற்றுவது எவ்வளவு சிரமம் என்பது பற்றி எதுவும் சொல்ல மாட்டார்கள். அந்த வீடியோக்களை  பார்ப்பவர்கள் அடடா என்ன அழகு ஸ்நோ , கண்ணால் பார்க்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும் , நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றெல்லாம் கமென்டஸ் போட்டிருப்பார்கள்.  ஸ்நோ  பார்ப்பதற்கு அழகுதான், ஆனால் அதில் இருக்கும் சிரமம்?.  அதை  பற்றியும் சொல்ல வேண்டாமா?!.  ஒரு விஷயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் ஏன் காட்ட வேண்டும் அதற்கு  மறு பக்கமும் இருக்கிறது அல்லவா. அதை ஏன் சொல்ல மறுக்கிறார்கள் . அழகை சொல்பவர்கள் அவஸ்தையையும் சொல்லத்தான் வேண்டும். 





சாலையோர பனி குவியல்

 குழந்தைகள்  ஸ்நோ  பார்த்து கூத்தாடுவார்கள், ஸ்னோமேன்.செய்து விளையாடுவார்கள். ஆனால் எவ்வளவு நேரம் . 5 நிமிடம் ஆடலாம் பாடலாம் அதன் பின்.  கடும் குளிரில் நின்றுதான் அதை செய்ய முடியும்  அழகின் பின் அவஸ்தை இருக்கிறதே  அதை மறுக்க முடியுமா. 

ஜன்னலில் இருந்து பனி பொழிவதை பார்த்து ரசிக்கலாம். பனி பொழியும் போது ஏதோ விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் கீழே கொட்டுவது போலிருக்கும்  அதை பார்த்து ரசிக்கலாம். ஆனால் எல்லாம் ஒரு நாள் நடப்பது இரண்டு நாட்கள் நடப்பது என்றால் பார்த்து பார்த்து மகிழலாம். ஆனால் இரண்டு மூன்று  மாதங்கள்  அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்கிறபோது சலிப்பு தானே ஏற்படும்.. வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து விட முடியுமா 


நிறம் மாறும் பனி

   அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்தானே. அழகை நினைக்க முடியாது. அவஸ்தைதான்  தெரியும். 

இப்போது எனக்கு snowவும் winterயும் எப்போது முடியும் என்று காத்திருக்கிறேன். எனக்கு கல்லூரி நாளில் படித்த ஷெல்லியின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.    

If winter comes can spring be far behind

                            -  Shelly 

Saturday 1 January 2022

In memoriam

 

'மீண்டும் உன்னை எப்போது பார்ப்பேன் கண்ணா?!'




எங்களுக்கு கண்ணன்


என், அக்கா, என் தங்கை குழந்தைகளுக்கு கண்ணா மாமா


தம்பி குழந்தைகளுக்கு கண்ணன் பெரியப்பா


திரைத்துறையினருக்கு 'ஆச்சார்யா' ரவி.


நிறைய பேசுவோம் நாங்கள். நாங்கள் எட்டு பேர் உடன்பிறந்தவர்கள். அனைவரும் சந்தித்துக் கொண்டால் சிரிப்பு, பேச்சு, கிண்டல், கேலி என்று இடமே களைகட்டும். சினிமா பற்றி அவன் வாயைக்  கிண்டுவோம்.அந்த கிசுகிசு உண்மையா? இந்த செய்தி உண்மையா என்று கேட்டு கேட்டு சலித்துப்  போவோம். ஒரு வார்த்தை கூட அவன் வாயிலிருந்து வராது  சினிமா பற்றியோ, சினிமாதுறையினர் பற்றியோ குறையாக அவன் பேசியது இல்லை. எப்போதும் பாசிட்டிவான பேச்சு; யாரையும் குறை பேசியதில்லை, குற்றம் சாட்டியதில்லை.


சினிமா அவன் மூச்சு. பெரிய இயக்குனராக வரவேண்டும்  என்பது அவன் கனவு. இயக்குனர் ஆனான். பெரிய இயக்குனர் ஆகவில்லை. முதல் படத்தின் மூலம் ஆச்சார்யா என்ற அவன் படத்தின் தலைப்பு அவன் பெயருடன் ஒட்டிக் கொண்டது. அடுத்த படம் வியாபாரம் ஆகாமல் முடங்கிய போது வருந்தினான், அனால் சலித்துக் கொள்ளவில்லை. அவன் விரும்பிய சினிமாதுறை அவனை  கைதூக்கி விடும் என்ற நம்பிக்கை அவனுக்கு அதிகமாகவே இருந்தது.


சினிமாவில் அவன் பெரிதாக பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் நிறைய நண்பர்களை சம்பாதித்தான். நற்பெயரை சம்பாதித்தான். குடும்பத்தில் யாருக்கு என்ன கஷ்டம் என்றாலும் உதவுவதற்கு முதல் ஆளாக நிற்பான். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் சாலை விபத்தில் இறந்ததிலிருந்து என் குடும்பத்திற்கு பெரிய ஆதரவாக இருந்தான்.


கனடாவில் பணிபுரிந்து கொண்டிருக்கும் என் பெண்ணை பார்க்க வரும் நான் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் சென்னையில் இருப்பேன். மற்ற மாதங்கள் இங்குதான் வாசம். ஒவ்வொரு முறை நான் கனடா கிளம்பும்போதும் சென்னை வரும்போதும் என்னை வழிஅனுப்புவதும் அவன்தான். சென்னையில் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து சென்று விடுவதும் அவன்தான். சென்னையில் இருக்கும்போது, திடிரென்று மனம் சரியில்லை என்றால், இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் ஒரு போன் தான். "கண்ணா என்னவோ தெரியவில்லை, மனதே சரியில்லை" என்றால் உடனே வருவான்.


கடல் கடந்து இருப்பதில் பல சிரமங்கள், கஷ்டங்கள், வேதனைகள் இருக்கிறது. ரத்த உறவுகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனம் பதறுகிறது.அருகில் இருக்க முடியவில்லை என்று மனம் வேதனை படுகிறது . ஒரு நாள் கூட உடல்நிலை சரியில்லை என்று கண்ணன் சொன்னதில்லை; உடம்பு சரியில்லை டாக்டரை பார்த்து வந்தேன் என்று சொல்லியதில்லை. அப்படிப்பட்ட கண்ணனுக்கு கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல்  போனது. Gall bladder problem என்று டாக்டர் surgery என்று சொன்னபோது முழுக்குடும்பமும் ஆடிப்போனது. major surgery தான், இருந்தாலும் problem இருக்காது என்று சொல்லப்பட்டபோது மனம் சற்று நிம்மதி  அடைந்தாலும், மனதிற்குள்  பதட்டம் தொடர்ந்து இருந்து கொண்டே  இருந்தது.


கண்ணனுக்கு உடல்நிலை சரியில்லை என்கிற பதட்டத்துடன் தொலைதூரத்தில் இருப்பதில் உடனடியாக சென்று பார்க்கக்கூட முடியவில்லை என்கிற யதார்த்தமும் மனதை அமைதி இழக்க வைத்தது   உடன்  பிறந்தவர்களில் யாருக்கு உடல் நலப்  பிரச்சனை ஏற்பட்டாலும் அருகில் இருந்தோமேயானால்  ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதே மனதுக்கு பெரிய ஆறுதல்த்தரும்... தொலைபேசியில் எவ்வளவு பேசுவது; நேரில் பேசும் திருப்தி எப்படி கிடைக்கும்?


விதி அவனது வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது. சர்க்கரை, பீபி என்று எந்த சிக்கலும் அவனுக்கு கிடையாது. அறுவை சிகிச்சையும் நன்கு முடிந்தது. சற்று குணம் தெரிய ஆரம்பித்தது . ஆனால்  ஒரு ஓரத்தில் நின்று விதி எங்களை பார்த்து பரிதாப பட்டுக்கொண்டிருந்தது எங்களுக்கு தெரியவில்லை. மறுநாள் தனது கோரத்தாண்டவத்தை விதி ஆரம்பித்தது.


கொஞ்சம் கொஞ்சமாக குணம் தெரிய ஆரம்பித்த நிலையில் திடிரென்று மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. அடுத்தடுத்து சில பிரச்சனைகளும் முளைத்தன. மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை. ஒரே வாரத்தில் இரண்டு அறுவை சிகிச்சைகள். இறுதியில் விதி வென்றது. தகவல் வந்தபோது இங்கு கனடாவில் இரவு நேரம்.அதிர்ச்சி, பதட்டம், வருத்தம், வேதனை, அழுகை. கிளம்பமுடியவில்லை என்கிற விரக்தி - எல்லாம் சேர்ந்து கொள்கிறது... உடன்பிறந்தவர்களுடன் பேச வேண்டும், துக்கத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று மனம் துடிக்கிறது.என்ன செய்வது என்று புரியவில்லை. வீட்டிற்குள் அமர்திருக்க பிடிக்கவில்லை. என் பெண் பெருகி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு என்னை சமாதானம் செய்ய  முயல்கிறாள். ஸ்தம்பித்து போய் அமர்திருக்கிறேன்.


"கண்ணா, நம்பமுடியவில்லை கண்ணா நீ இல்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. உன்னை கடைசியில் கூட பார்க்க முடியவில்லை என்று வேதனையில் புழுங்குகிறேன் . இளம் வயதில், வீட்டில் நாம் அனைவரும் ஒன்றாய் வளர்ந்த காலத்தில் நமக்குள் ஏற்பட்ட சின்ன சின்ன சண்டைகள், பத்திரிகை செய்திகள் பற்றி, அரசியல் பற்றி, சினிமா பற்றி நாம் எல்லாரும் அரட்டை அடித்தது , விவாதித்தது கிண்டல் கேலி செய்து கொண்டது எல்லாம் நினைவுக்கு வருகிறது கண்ணா". பின் ஒவ்வருவராக  திருமணமாகி சென்றுவிட, விசேஷதினங்களில் நாங்கள் அனைவரும்  ஒன்று சேருவது, அரட்டை அடிப்பது, கிண்டல், கேலி என்று இரவு நீண்டநேரம் பேசிக் கொண்டிருப்பது, என்று அனைத்தும் மனதில்  வந்து போகிறது.


வாழ்க்கை நிலையற்றதுதான். எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. நமது வாழ்க்கை பயணத்தின் பாதையை, எங்கே நாம் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயம் செய்பவர் கடவுள்தான். அவர்தான் வாகன ஓட்டுனர். நாம் அனைவரும் பயணிகள் எந்த பயணி எங்கு இறங்க வேண்டும் என்று முடிவு செய்பவரும் அவரே.

 இந்த தத்துவ மெல்லாம் அவரவருக்கு துக்கமும் வேதனையும் வரும்போது, அவரவர் இழப்பை சந்திக்கும்போது, எடுபடாதவை. உணரமுடியாதவை. கடவுள் போடும் கணக்கு வேறு. இழப்பு என்பது தவிர்க்கமுடியாது. இழப்பின் சோகத்தை, வேதனையை சுமந்துதான் ஆகவேண்டும்.


தகவல் கேள்விப்பட்டு, மறுநாள் செய்தித்தாளில் செய்தி பார்த்துவிட்டு, கல்லூரிக் கால தோழிகள், இளம்வயதில் மதுரையில் எங்கள் வீட்டிற்கு அருகே இருந்தவர்கள் எப்படி எப்படியோ, யார் யாரிடமோ எனது தொடர்பு எண்ணை வாங்கி எனக்கு போன் செய்து தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்டபோது, எங்களது இளம் வயது நாட்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து படுத்தி எடுத்தது.


இளம் வயதில் நாங்கள் மதுரையில் இருந்த காலம் மிகவும் சுவாரஸ்யமானது. அப்போது இரண்டு அக்காக்களுக்கு திருமணமாகி விட்டது. நாங்கள் ஆறு பேர் வீட்டில். கலகலப்பு அதிகம் இருக்கும். ஒரு விடுமுறை நாள் மதியம். கரண்ட்கட். வேர்த்துக் கொட்டுகிறது. நான் என் தங்கை சுஜியிடம் (சுஜாதா) எனக்கு விசிறி எடுத்து வீசு, உனக்கு 5 பைசா தருகிறேன் என்கிறேன். அவள் விசிறியை எடுத்து வீச ஆரம்பிக்கிறாள். உடனே கண்ணன், பானுக்கு வீசாவிட்டால் 10 காசு என்றான். உடனே என்தங்கை விசிறியை தூக்கிபோட்டுவிட்டு அவனுடன் சேர்ந்து கொண்டு விடுகிறாள். வீடே என்னை கிண்டல் செய்கிறது. இந்த சம்பவத்தை நாங்கள் அனைவரும் ஒன்று கூடும் சமயத்தில் சொல்லி சொல்லி சிரிப்போம்.

கண்ணனுக்கு கண்ணன் என்று பெயர் வைத்த காரணம் ரொம்ப  சுவையானது. எனக்கு அடுத்தவன் கண்ணன். நாங்கள் அப்போது தேவகோட்டையில் இருந்தோம். அப்போதெல்லாம் பால்க்கார அம்மாதான் தயிரும் விற்பனை செய்வார்கள். வீட்டில் தான் குழந்தைகள் பிறக்கும். மருத்துவ மனையில் அல்ல. எங்கள் தயிர்க்கார அம்மா எங்களுக்கு தயிர் கொடுத்துவிட்டு கேட்டை தாண்டும்போது கால் தடுக்கி தலையில் அவர் வைத்திருந்த தயிர் பானை கீழே விழுந்துவிட்டது. பானை உடைந்து தயிர் முழுவதும் கீழே கொட்ட, அந்த வினாடி அவன் பிறக்கிறான்."கண்ணன் பிறந்திருக்கான் . பாரேன், பிறந்ததும் தயிரை கொட்டி விட்டான்" என்று அங்கு கூடியிருந்த உறவினர்கள் சொல்ல அந்த நிமிடமே  அவன் பெயர் கண்ணன் ஆயிற்று . அந்தக் காட்சி எனக்கு நன்கு நினைவிருக்கிறது. 


பிரிவு கொடுமையானது;

கொடுமையிலும் கொடுமை நிரந்தரப் பிரிவு. அதிலும் பெரும் கொடுமை, பிரிந்த என் அன்புக்குரிய தம்பியை கடைசி நேரத்தில் பார்க்க முடியாமல் போனது. 


எப்போதும் நான் சென்னை திரும்பும் போது விமான நிலையத்திற்கு வந்திருப்பாய்! நான் சென்னையில் முதலில் பார்ப்பது உன்னைத்தான். எங்கு நிற்கிறாய் என்று எனது கண்கள்  உன்னை தேடும்போது" இதோ இருக்கிறேன்" என்று கைகாட்டுவாயே... இதெல்லாம் மீண்டும் வராதா? இனி உன்னை எப்போது பார்ப்பேன்?


மனம் கனத்து போயிருக்கிறது கண்ணா...