Total Pageviews

Sunday, 13 March 2022

வெள்ளாயியும் வெள்ளை கோபுரமும்




ஸ்ரீரங்கம் கோயில்


வெள்ளாயியும்  வெள்ளை கோபுரமும்  


வெள்ளை கோபுரம்
   வெள்ளை கோபுரம்



        ஸ்ரீரங்கம் கோயில் என்னை பிரமிக்க வைத்தது போலவே அதன் கோபுரங்களும் என்னை வியக்க வைத்திருக்கின்றன. தமிழ் நாட்டில் உள்ள பிரபல கோயில்கள் அனைத்துமே உயர்ந்த கோபுரங்களை உடையது தான். ஆனால் ஸ்ரீரங்கம் கோயில் கோபுர வரலாறு சற்றே வித்தியாசமானது. சுவாரசியமானது.  


        ஸ்ரீரங்கம் கோயில் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் இருக்கிறது என்று எனது முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். அதில் இன்று நாம் பார்க்கப் போவது வெள்ளை கோபுரம் பற்றியது.
 
   
         ஸ்ரீரங்கம் கோயிலில் 21 கோபுரங்கள் இருக்கிறது. கோயிலின் தெற்கே இருக்கும் ராஜ   கோபுரமும்  கிழக்கே இருக்கும் வெள்ளை கோபுரமும் பல விதங்களில் வியப்பை ஏற்படுத்துபவை. நான் ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது ஒரே வழியில் கோயிலுக்கு செல்ல மாட்டேன். ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு வழியாக போவேன். அப்படி முதல் முறையாக வெள்ளை கோபுரம் வழியாக சென்றபோது  அந்த கோபுரம் ஏன் வெண்மையாக இருக்கிறது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஆனால் எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. கோயில் ஒழுகு புத்தகமும் தி இந்து நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையும் எனது கேள்விக்கு சரியான பதிலை அளித்தன.

 
         இந்த நிகழ்வு 14 வது நூற்றாண்டில் நடந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 1323 ஆம் வருடம். அப்போது தான் தென் இந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பு நிகழ்ந்தது. தென் இந்திய கோயில்களில் சுத்த  தங்க வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பல பொக்கிஷங்கள் இருப்பதை கேள்விப்பட்டு அதை கொள்ளையடிக்க அப்போதைய  சுல்தான்கள் இங்கு படையெடுத்து வந்தார்கள். அவ்வாறு வந்த  சுல்தானிய  படையிடம் ஸ்ரீரங்கமும் வீழ்ந்தது. கோயிலில் பெரும் பொக்கிஷம் கொட்டிக் கிடைக்கிறது என்பதை புரிந்து கொண்டு கோயிலை சுற்றி வளைத்தன  சுல்தானிய படைகள். 


கம்பிரமான ராஜ கோபுரம்
வண்ணமயமான  ராஜ கோபுரம்



         பெருமாள் பக்தர்கள்  நிறைந்த ஸ்ரீரங்கத்தில் சுல்தானிய படைகளை உள்ளூர்வாசிகள் எதிர்க்க அவர்களை கொன்று குவித்தன படைகள். இதில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாண்டார்கள். ஸ்ரீரங்கம் முழுவதும் சுல்தானிய படைகளின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பொன்னையும் பொருளையும் கொள்ளை அடித்தும் கூட சுல்தானிய படைகளுக்கு திருப்தி இல்ல. சுல்தானிய படை தளபதிக்கு நம் பெருமாளை(உத்சவர்) எப்படியும் கொள்ளை அடித்து சென்று விட  வேண்டும் என்கிற தணியாத வேகம் இருந்தது. அதனுடன் மேலும் பல பொக்கிஷங்களும் கோயிலுக்குள் இருக்கிறது , அதனை முழுவதுமாக கொள்ளை அடித்தவுடன்தான் ஸ்ரீரங்கத்தை விட்டு செல்ல வேண்டும்  என்று தளபதி நினைத்திருந்தான்.


          ஸ்ரீரங்கம் கோயில் தாசி (அப்போது தேவதாசி முறை இருந்தது.)வெள்ளாயி  அம்மாள் என்பவர். நடனம் மூலம் இறை பணி செய்து வந்தவர். அரங்கனின் பரம பக்தை. சுல்தானிய படைகள்  நம் பெருமாளை நெருங்கி விடக்  கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார். அதனால் தினமும் படை தளபதி முன் நடனமாடி அவனது கவனத்தை சிதற அடித்தார். நன்கு பழகுவது போல் நடித்தார். இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்த வைணவ ஆச்சாரியரான பிள்ளை லோகாச்சாரியார் கோயிலுக்குள் நம் பெருமாள் விக்கரகம் இருந்தால் ஆபத்து அதனை எப்படியும் சுல்தானிய படைகள் திருடிவிடும் என்று கருதி   மிக ரகசியமாக நம் பெருமாளை கோயிலிலிருந்து  எடுத்துக்கொண்டு மதுரையை நோக்கி சென்றுவிட்டார். இதனை அறிந்த வெள்ளாயி  பிள்ளை லோகாச்சாரியார் விக்ரகத்தை  எடுத்து சென்றுவிட்டார் என்ற செய்தி சுல்தானிய படைகளுக்கு தெரிந்து விட்டால் அவரை விரட்டி பிடித்துவிடும் என்று  புரிந்து கொண்டு ஒரு ஐடியா செய்தார்.


        பிள்ளை லோகாச்சாரியார் நம் பெருமாளுடன் சென்றது கொஞ்சமும் சுல்தானுக்கு தெரியக்கூடாது என்று சுல்தானை திசை திருப்ப அன்று இரவு முழுவதும் சுல்தானை மகிழ்விக்கும் வகையில் நடனமாட ஆரம்பித்தார். சுல்தான் ஏற்கனவே வெள்ளாயியின் அழகில் மயங்கி இருக்கிறவன். வெள்ளாயி ஆட ஆட சுல்தான் மயங்கி விட்டான். இதுதான் தக்க தருணம் என்று வெள்ளாயி , சுல்தானிடம் கோயிலில் இன்னும் நிறைய தங்கமும் வைரமும் வைடூரியமும் இருக்கிறது , வாருங்கள் காட்டுகிறேன் , இந்த கோபுரத்தின் மேலே ஏறி  போய் அங்கிருந்து பார்த்தால் , ஆபரணங்களும் நம்பெருமாள் விக்கிரகம் இருக்கும் இடமும் தெரியும் வாருங்கள் என்று சொல்லி கிழக்கு கோபுரம் மேலே சுல்தானை கூட்டி சென்றாள் . சுல்தானும் ஆசையுடன் சென்றான். இதோ இங்கு பாருங்கள் , இங்கே இங்கே என்று சொல்லி சுல்தானை கோபுரத்தின் உச்சியிலிருந்து தள்ளி விட்டாள் . 
சுல்தான் தலை குப்புற விழுந்து இறந்தான். சுல்தான் இறந்து விட்டது தெரிந்தால் சுல்தானிய படைகள் தன்னை சும்மா விடமாட்டார்கள் என்பது வெள்ளாயிக்கு  நன்கு தெரியும். உடனே ரங்கா ரங்கா என்று அரங்கனின் பெயரை ஜபித்தபடியே அவளும் கிழக்கு கோபுரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தாள் .


         செய்தி அறிந்த உள்ளூர் மக்கள் ஓடி வந்தனர். வெள்ளாயியின் தியாகம் அவர்களை மெய்  சிலிர்க்க வைத்தது  தலைவனை இழந்த சுல்தானிய  படை செய்வதறியாது திகைத்து நிற்கையில் விஜய நகர படைகள் அவர்களை விரட்டி அடித்தன. வெள்ளாயியின் தியாகம் பற்றி அறிந்த விஜய நகர படையின் தலைவர் கெம்பண்ணா  கிழக்கு கோபுரத்தை வெள்ளாயியின் நினைவாக வெள்ளை கோபுரம் என்று அழைக்கலாம் என்று அறிவித்தார்.  கிழக்கு கோபுரத்திற்கு வெள்ளை நிற பெயிண்ட் அதிலிருந்து அடிக்கப்பட்டது.  இன்றும் கிழக்கு கோபுரம்  வெள்ளாயியின் நினைவாக, தியாகத்தின் அடையாளமாக, வெண்மையாக உயர்ந்து நிற்கிறது.  1323யில்  ஸ்ரீரங்கத்திலிருந்து சென்ற நம்பெருமாள் விக்கிரகம் 1371இல் மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டுவரப்பட்டதாக ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு சொல்கிறது.

2 comments:

  1. வணக்கம்,வெள்ளை கோபுரத்தின் வரலாறு ,சிறப்பு எல்லாம் மெய் சிலிர்க்க வைத்தது.பெண் சக்தி பெரும் சக்தி என நிரூபித்த வெள்லாயி நமக்கு சேர்த்த பெருமை வியக்க வைக்கிறது.பணி தொடர வாழ்த்துக்கள்.
    சந்திரா.

    ReplyDelete